ஆஹா.. அமெரிக்க பெண்ணுக்கு தமிழ் கல்யாணம்..

அரூர் பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும் அமெரிக்க பெண்ணிற்கும் தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் சிறப்பாக நடைபெற்றது.



கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா பாவக்கல்லையை சேர்ந்தவர் சண்முகம். இவர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.



இவரது மனைவி ரேணுகாதேவி, ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர்களது மகன் திருநாவுக்கரசு. வயது 32. அமெரிக்காவில் கடந்த ஆறு ஆண்டுகளாக மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார்.

இவரும், அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவ தம்பதிகளின் மகளான எலிசபெத் கல்லகர் (மருத்துவர்) என்பவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.





இந்நிலையில் எலிசபெத் கல்லகர் மற்றும் அவரது பெற்றோர் தமிழ் முறைப்படி திருமணம் செய்ய விரும்பியதை அடுத்து முறைப்படி விசா பெற்று அவர்கள் குடும்பத்தினர் தமிழகம் வந்தனர்.





இதையடுத்து, முறைப்படி திருமண பத்திரிகை அடிக்கப்பட்டு, உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்கப்பட்டது. நேற்று, தருமபுரி மாவட்டம் அரூரில் ஊத்தங்கரை செல்லும் சாலையில் உள்ள திருமண மண்டத்தில் காலை 9:00 மணி முதல் திருமண நிகழ்ச்சிகள் துவங்கியது. இதில் மணப்பெண்ணின் பெற்றோர்கள் அவரது உறவினர்கள் என பத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.





திருமண விழாவில் எலிசபெத்தின் தாய், தந்தை, உறவினர்கள் அனைவரும், தமிழகப் பாரம்பரிய முறைப்படி, பட்டு வேட்டி,  சட்டை,  பட்டுப்புடவை, நெற்றியில் குங்குமம், தலையில் மல்லிகை பூ வைத்து,  பங்கேற்றனர்.

பட்டுப் புடவை சரசரக்க மணமேடையில் வந்து அமர்ந்த மணப்பெண்ணின் கழுத்தில் முறையாக அக்னி வளர்த்து, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, ஜயர் வேதங்கள் முழங்க திருநாவுக்கரசு தாலி கட்டினார்.




பின், இருவரும் மாலை மாற்றிக் கொண்டதுடன்,  மணப்பெண்ணின் நெற்றியில் மணமகன் குங்குமம் வைத்தார். திருமணத்தில்  கலந்து கொண்டவர்கள் மணமக்களை வாழ்த்தினர். இதில், பங்கேற்ற அனைவருக்கும் மல்லிகைப்பூ செடி தாம்பூலமாக வழங்கப்பட்டது.



Previous Post Next Post