
தமிழகத்தில் கண் தெரியாத மகனை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய தாயை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையை அடுத்த பரங்கிமலை நரசத்புரம் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (37). இவருக்கு பத்மா(35) என்ற மனைவியும், பார்வையற்ற பரத்(13) என்ற மகனும் உள்ளனர்.
பரத் அடையாறில் உள்ள பார்வையற்ற பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இருவரும் தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பரத் அம்மாவுடன் வசித்து வந்துள்ளான்.
இதைத் தொடர்ந்து நேற்று முன் தினம் வீட்டில் சாப்பிட்டுவிட்டு படுத்த பரத் அதன் பின் எழுந்திருக்கவில்லை என கூறி அவனை பத்மா அங்கிருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரியவர, அவர்கள் உடனடியாக உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
பரத்தின் சாவில் பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் பத்மாவிடம் கிடுக்கிபிடி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது பத்மா, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மகனுடன் தனியாக வசித்து வந்தேன். தனியாக வாழ்ந்து வந்தது மன உளைச்சலாக இருந்தது.
இதனால் மகனை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன். இதற்காக பிளாஸ்டிக் கவரை போட்டு பரத்தின் கழுத்தை இறுக்கினேன்.
இதில் அவன் மயங்கினான். பின்னர் நானும் அதை போல் செய்தேன். ஆனால் என்னால் முடியவில்லை.
இதனால் பரத்தை காப்பாற்றுவதற்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். ஆனால் அவன் இறந்துவிட்டான். அங்கு கணவர் மற்றும் குடும்பத்தினர் இருந்ததால் உண்மையை கூறவில்லை என்று தெரிவித்துள்ளார்.