தமிழ் மாணவன் தூக்கிட்டு தற்கொலை : இந்த நிலைக்கு காரணம் யார்?


எந்த ஒரு மாணவனையும் மதம் மாற்றம் செய்வதற்கு யாருக்குமே உரிமை கிடையாது என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

லிந்துலை சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற மிகச் சிறந்த தலைவர்கள் எனும் ஆங்கில மொழி நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில், அண்மையில் இறக்குவானை பகுதியில் தற்கொலை செய்து கொண்ட தமிழ் மாணவன் மன அழுத்தம் காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளதாக எனக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் தகவல்கள் கிடைத்துள்ளன.

நான் இந்த செய்தியை கேட்டதும் கல்வி இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். நாங்கள் மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்ற ரீதியில் செயற்பட்டு வருகின்றோம்.

ஆனால் இவ்வாறான நிகழ்வுகளை ஏற்றுக் கொள்ள முடியாது. அவன் அந்த நிலைக்கு தள்ளப்படுவதற்கு காரணம் யார் என்பதை கண்டறிய வேண்டும்.

அவனுக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தம் எதனால், யாரால் ஏற்பட்டது. அத்துடன் உண்மையிலேயே அவனை யார் மத மாற்ற முயற்சி செய்துள்ளார்கள். இந்த கேள்விகளுக்கு விடை தேட வேண்டிய கட்டாயம் எங்கள் அனைவருக்கும் இருக்கின்றது.

எந்த காரணம் கொண்டும் யாரும், யாரையும் மதம் மாற்றம் செய்ய முயற்சி செய்யக்கூடாது. குறிப்பாக மாணவர்கள் மத்தியில் இதனை கொண்டு போக முடியாது.




ஏனென்றால் அவர்களுடைய அந்த பருவத்தில் அவர்களுக்கு முடிவு எடுக்க முடியாத ஒரு நிலையில் இருப்பார்கள். எனவே பெற்றோர்கள் பிள்ளைகளின் விடயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

அவர்களிடம் எதனையும் திணிக்கவோ, விரும்பாத விடயங்களை செய்யும் படியோ வற்புறுத்த கூடாது. கல்வியில் கூட அந்த நிலைதான். ஏனென்றால் அவன் விரும்பி செய்கின்ற காரியத்தில் மாத்திரமே அவன் வெற்றி பெறுவான்.



இதனை பெற்றோர்களும், ஆசிரியர்களும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும். தற்பொழுது நாங்கள் பல மாகாண பாடசாலைகளை அபிவிருத்தி செய்து வருகின்றோம்.




நான் அண்மையில் வவுனியா, மன்னார் மற்றும் யாழ். பகுதிகளுக்கு சென்றிருந்தேன். அங்கு ஒரு பகுதியில் கிறிஸ்தவர்களும், ஒரு பகுதியில் முஸ்லிம்களும் ஒரு பகுதியில் சைவ சமயத்தை சார்ந்தவர்களும் இன்னும் ஒரு பகுதியில் பௌத்தர்களும் வாழ்ந்து வருகின்றார்கள்.

அங்கு தற்பொழுது படிப்படியாக மத நல்லிணக்கம் ஏற்பட்டு வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது. இது ஒரு ஆரோக்கியமான செயற்பாடாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post