இந்தியாவின் கேரள மாநிலத்தில் குடும்ப தகராறு காரணமாக கணவர் கண் முன்பு குழந்தையுடன் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் ஆலப்புழ மாவட்டத்தில் பாரக்கல் பகுதியில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
இப்பகுதியை சேர்ந்த மாயா(19) மற்றும் திலீப்(24) தம்பயருக்கு பிறந்து 10 மாதமேயான மைதிலி என்ற பெண் குழந்தை இருந்தார்.
திலீப் நடன பஇற்சி அளிப்பதை தொழிலாக செய்து வந்துள்ளார். இதில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
தமது கணவரை வேறு தொழில் தேடிக்கொள்ள மாயா தொடர்ந்து நிர்பந்தித்தும் வந்துள்ளார். ஆனால் நடன பயிற்சி அளிப்பதை கைவிடுவது இல்லை என திலீப் உறுதியாக தெரிவித்துள்ளார்.
சம்பவத்தன்று திலீப் நடனபள்ளிக்கு புறப்பட தயாரானார். இதற்கு மாயா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இனிமேல் நடன பயிற்சிக்கு சென்றால் தான் குழந்தையுடன் தற்கொலை செய்வேன் என்று மிரட்டினார். இதனை காதில் வாங்கிக்கொள்ளாமல் திலீப் புறப்பட்டார்.
இதில் ஆத்திரமடைந்த மாயா தனது குழந்தையை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள கிணற்று பகுதிக்கு சென்றார். திலீப் இதனை பார்த்தும் அவர்களை தடுக்காமல் அலட்சியம் செய்ததாக கூறப்படுகிறது.
கண் இமைக்கும் நேரத்தில் குழந்தையுடன் மாயா 40 அடி ஆழமுள்ள கிணற்றில் குதித்துள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த திலீப் சத்தம்போட்டு கிணறு அருகே ஓடினார். அங்கு தாயும், மகளும் தண்ணீரில் தத்தளித்தனர்.
அக்கம் பக்கத்தினர் கிணற்றில் இறங்கி அவர்களை மீட்க முயன்றனர். ஆனால் தண்ணீர் அதிகம் இருந்ததால் அவர்களை மீட்க முடியவில்லை.
இதனையடுத்து பரவூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி தாய்- மகளை மீட்டு பாரிப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து பாரிப்பள்ளி பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.