
தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் ஆசிரியை ஒருவர் திருமணமான ஒரே மாதத்தில் 10ஆம் வகுப்பு மாணவனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் திருவாகவுண்டனூரைச் சேர்ந்த 26 வயதான பட்டதாரி பெண்ணொருவர், தனியார் டுட்டோரியல் கல்லூரில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இவருக்கும், பாகல்பட்டியைச் சேர்ந்த சாப்ட்வேர் எஞ்ஜினியர் ஒருவருக்கும் கடந்த மாதம் 19ஆம் திகதி திருமணம் நடந்துள்ளது.
அதன் பின்னர் ஒரு வாரம் கழித்து குறித்த ஆசிரியையின் கணவர் வேலைக்காக சென்னைக்கு சென்றுவிட்டார். இதனால் வீட்டில் தனியாக இருந்த ஆசிரியை, பின்னர் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று தங்கினார்.
இந்நிலையில் ஒருநாள் வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு செல்வதாக கூறிவிட்டு வெளியில் சென்ற ஆசிரியை வீடு திரும்பவில்லை. இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த அவரது பெற்றொர், எங்கு தேடியும் மகள் கிடைக்காததால் பொலிசில் புகார் அளித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, கடந்த 4 நாட்களாக பொலிசார் தேடி வந்த நிலையில், 17 வயது மாணவனும் குறித்த ஆசிரியை காவல்நிலையத்திற்கு வந்துள்ளார். இதனை அறிந்த ஆசிரியையின் பெற்றோர், கணவன் வீட்டார் மற்றும் மாணவரின் பெற்றோர் அனைவரும் அங்கு கூடினர்.
பொலிசார் நடத்திய விசாரணையில், குறித்த மாணவன் அந்த ஆசிரியை வேலை பார்க்கும் டுட்டோரியல் கல்லூரியில் 10ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். அப்போது இருவருக்குள்ளும் நெருக்கம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, வீட்டை விட்டு வெளியேறி ராமேஸ்வரம், தூத்துக்குடி, திருச்செந்தூர் ஆகிய இடங்களுக்கு சுற்றித் திரிந்துள்ளனர்.
பின்னர் பொலிசார் தங்களை தேடுவதை அறிந்து உடனடியாக காவல்நிலையத்திற்கு வந்துள்ளது தெரிய வந்தது. அதன் பின்னர், பொலிசார் இருவருக்கும் அறிவுரை கூறிய நிலையில், குறித்த ஆசிரியை மாணவனுடன் தான் வாழ்வேன் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் மாணவனின் பெற்றோர் புகார் கொடுத்தால் ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என பொலிசார் அவரை எச்சரித்தனர். அதனைத் தொடர்ந்து ஆசிரியையின் பெற்றோர், கணவன் வீட்டாரும் தங்களுக்குள் பேசி முடித்துக்கொள்வதாக பொலிசாரிடம் தெரிவித்தனர். அதேபோல் மாணவனின் பெற்றோரும் தங்கள் மகனை அழைத்துச் சென்றனர்.