கோவில் பிரசாதத்தில் விஷம் வைத்து பலரை கொன்ற தமிழக பெண்: திடுக்கிடும் பின்னணி



கர்நாடக மாநில கோவிலில் பிரசாதத்தில் விஷம் கலந்தது தமிழகத்தை சேர்ந்த பெண் என தகவல் வெளியாகியுள்ளது.

சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகா, சுலவாடி கிராமத்தில் கிச்சுகுத்தி மாரம்மா என்ற அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சில தினங்கள் முன்பு கோபுரத்தின் மீது கலசம் வைத்து பூஜைகள் செய்யப்பட்டன.

இதையடுத்து பக்தர்களுக்கு தக்காளி சாதம் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த பிரசாதத்தை சாப்பிட்டவர்கள் உடல்நலக்குறைவால் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இதில் 15 பேர் பலியான நிலையில் 90க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கோவிலை நிர்வகிப்பது தொடர்பாக இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் பிரசாதத்தில் விஷம் கலக்கப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக கோவில் நிர்வாகிகள் சின்னப்பி, அவருடைய மகன் லோகேஷ், மாதேஷ், சமையல்காரர் புட்டசாமி உள்பட 7 பேரை பொலிசார் கைது செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையில் அம்பிகா என்ற பெண் தான் வீரியமிக்க பூச்சிக்கொல்லி மருந்தை பிரசாதத்தில் கலந்தார் என தகவல் வெளியாகியுள்ளது.

அம்பிகா அந்த கோவிலின் மேலாளர் மாதேஷ் என்பவரின் மனைவியாவார்.

தமிழகத்தை சேர்ந்த இவர் மாதேஷை திருமணம் செய்த பிறகு இந்த கிராமத்தில் வந்து தங்கியுள்ளார்.

கோவில் மற்றும் அது சார்ந்த மடத்தின் கட்டுப்பாட்டை தங்கள் கையில் எடுக்க வேண்டுமானால், பூசாரிக்கு அவப்பெயர் ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் அம்பிகா தான் விஷம் கலந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதாம்.

பூசாரி அஜாக்கிரதையாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாவார் என்பதால், அம்பிகா இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது.
Previous Post Next Post