புதுச்சேரி பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் 60 வயதான பாலகிருஷ்ணன். இவரே 23 வயதான மகள் தீபா மற்றும் 53 வயதான மனைவி வனஜா ஆகியோரை படுகொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த இளைஞருடன் தீபாவின் திருமணம் முடிவு செய்யப்பட்டிருந்தது. இருவரும் சில காலமாக காதலித்து வந்துள்ளனர்.
இந்த விவகாரம் அறிந்த பாலகிருஷ்ணன் மகளின் காதலை கடுமையாக எதிர்த்துள்ளார்.
மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு வாரம் முன்பு பாலகிருஷ்ணன் தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.
தொடர்ந்து சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்துள்ளார். மருத்துவமனையில் வைத்தே மகளுக்கும் மனைவிக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று மகளின் திருமணம் தொடர்பில் மனைவியுடனும் மகளிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஒருகட்டத்தில் கடும் ஆத்திரம் கொண்ட பாலகிருஷ்ணன், மகளின் தலையில் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளார். பின்னர் மனைவியையும் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
தொடர்ந்து கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற அவர் அதில் இருந்து தப்பவே, படுக்கை அறையில் புகுந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
அடுத்த நாள் திருமணப்பெண் தீபாவை நீண்ட நேரம் மொபைலில் அழைத்த உறவினர்களுக்கு ஏமாற்றம் மிஞ்சியது.
தொடர்ந்து அக்கம்பக்கத்தினரை தொடர்புகொண்டு விசாரித்துள்ளனர். அவர்கள் சென்று தீபாவின் குடியிருப்பை சோதனையிட்ட நிலையில் இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.