
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகளைக் கடத்த போவதாக வந்த இ-மெயில் மிரட்டலால் காரணமாக, அவரது மகளுக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தலைநகர் டெல்லியில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கடந்த 9ஆம் திகதி முதல்வர் கெஜ்ரிவாலின் அலுவலகத்திற்கு இ-மெயில் ஒன்று வந்துள்ளது.
அதில், ‘உங்களின் மகளைக் கடத்த போகிறோம். அவரைப் பாதுகாக்க என்ன வேண்டுமோ செய்துகொள்ளுங்கள்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் பதறிப்போன டெல்லி அதிகாரிகள் முதல்வருக்கு இந்த தகவலை தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, முதல்வரின் மகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவருடன் 24 மணிநேரமும் பொலிசார் ஒருவர் இருப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இந்த மெயில் தொடர்பாக டெல்லி சைபர் க்ரைம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருந்தும் இது குறித்து முதல்வர் தரப்பில் இருந்து எந்தப் புகாரும் அளிக்கப்படவில்லை.
அன்றைய தினம் இதேப் போன்று மூன்று, நான்கு மெயில்கள் கெஜ்ரிவால் அலுவலகத்துக்கு வந்துள்ளன.
இவ்விவகாரம் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கவும் கெஜ்ரிவாலின் குடும்பத்தாருக்கு பாதுகாப்பு வழங்கவும் வேண்டும்.
குறிப்பாக, அவரின் மகளுக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மெயில் வந்த பின்னர் கெஜ்ரிவாலோ, அவரது குடும்பத்தாரோ தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் எனக் கேட்கவில்லை.
நாங்களாகவோ அவரின் மகளுக்குப் பாதுகாப்பு வழங்கியுள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.
கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா, குருக்ராமில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.