
திருவள்ளூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றில் சிக்கி கால் துண்டாகி தூக்கி வீசப்பட்ட இளைஞரின் உடல் ஆந்திர மாநிலம் கர்ணூலில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர். காக்களூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.
புதன்கிழமை இரவு பணி முடிந்து தனது இரு சக்கரவாகனத்தில் சுதாகர் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவர் அத்திப்பட்டு நோக்கி திருவள்ளூர்_ திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பாண்டூர் அருகே சென்றபோது ஒரு லாரியை முந்திச் செல்ல முயன்றார்.
அப்போது எதிரே திருப்பதியிலிருந்து சென்னை நோக்கி வந்த கார் ஒன்று பைக் மீது பயங்கரமாக மோதியது. மோட்டார் சைக்கிளில் வந்த சுதாகர் தூக்கி வீசப்பட, ஓட்டுனர் காரை நிறுத்தாமல் சென்றுவிட்டார்.
விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த உறவினர்கள் பார்த்த போது விபத்து நடந்த இடத்தில் அவரது பைக் மற்றும் ஹெல்மெட் ஒருபுறம் என சாலையில் சிதறி கிடந்தது.
சுதாகரின் ஒரு கால் மட்டும் அங்கு துண்டாகி கிடந்த நிலையில் அவரின் உடலை காணவில்லை. அக்கம்பக்கம் உள்ள முள்புதர்களில் தேடிப்பார்த்த போதும் கிடைக்கவில்லை.
ஒரு வேளை யாராவது அவரை மீட்டு சிகிச்சைக்கு சேர்த்திருக்கலாம் என்ற சந்தேகத்தில், திருவள்ளூரில் இருந்து சென்னை வரை உள்ள அனைத்து மருத்துவமனைகளில் தேடியும் அவர் எங்கும் சிகிச்சையில் இல்லை என்பது தெரியவந்தது.
விபத்தில் சிக்கிய சுதாகர் என்ன ஆனார் உயிருடன் இருக்கிறாரா ? இல்லையா ? என்ற விவரமும் தெரியவில்லை.
வியாழக்கிழமை காலை போலீசாரிடம் விபத்து ஏற்படுத்திய கார் ஒப்படைக்கப்பட்ட நிலையில் சுதாகரின் உடல் குறித்த எந்த தகவலும் கிடைக்காததால் பாண்டூர் கிராம மக்கள் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டா 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து சுதாகரின் உடலை தேடும் பணியில் திருவள்ளூர் மாவட்ட காவல் துறையினர் தீவிரம் காட்டினர்.
சி சி டிவி கேமரா மூலம் சம்பவம் நடந்த நேரத்தில் அந்த வழியாக சென்ற வாகனங்களின் பதிவெண்களை வைத்து தேடிய போதும் துப்பு துலங்கவில்லை.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் கடப்பா அருகே சிமெண்ட் ஏற்ற சென்ற காலியான லாரி ஒன்றில் கால் துண்டான நிலையில் சுதாகரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொன்னிக்கு தகவல் வந்தது.
அதாவது சம்பவம் நடந்த போது சுதாகரின் உடலானது கால் துண்டான நிலையில் பின் பக்கம் வந்த லாரிக்குள் தூக்கி வீசப்பட்டுள்ளது.
விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல் சென்றதாலும், இந்த விபத்தில் லாரிக்கு தொடர்பில்லாததாலும் லாரி ஓட்டுனர் தனது வாகனத்தை நிறுத்தாமல் ஓட்டிச்சென்றுள்ளார்.
ஆந்திர மாநிலம் கர்ணூலில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலைக்குள் செல்வதற்கு முன்பாக லாரியை சோதனை செய்த போது லாரிக்குள் இளைஞர் சடலம் இருக்கும் தகவல் ஓட்டுனருக்கு தெரியவந்துள்ளது.
அவர் நேரில் பார்த்த விபத்து குறித்து அங்குள்ள காவல்துறையினரிடம் விவரித்துள்ளார்.
இதையடுத்து ஆந்திர காவல்துறையினர் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை தொடர்பு கொண்டு விபத்தில் சிக்கிய சடலம் லாரியில் விழுந்த தகவலை விளக்கி உள்ளனர்.
இதையடுத்து சுதாகரின் உடலை திருவள்ளூர் கொண்டு வருவதற்காக தமிழக காவல் துறையினர் ஆந்திராவிற்கு விரைந்துள்ளனர்.
திருவள்ளூர் கொண்டு வரப்படும் சுதாகரின் சடலம் பிணகூறாய்வுக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரவு நேரங்களில் இரு சக்கர வாகனத்தில் பயணிப்போர் தங்களால் கட்டுப்படுத்தும் வேகத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் வாகனத்தை ஓட்டிச்செல்ல வேண்டும், முன்னெச்சரிக்கை இன்றி கனரக வாகனங்களை அதிவேகத்தில் முந்தி செல்ல அவசரம் காட்டினால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு உதாரணம்.